Рет қаралды 384
மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் வரிகள் மற்றும் தமிழ் விளக்கம் #shiva panchakshara stothram#
நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம ஷிவாய
வாசுகியை மாலையாய்க் கொண்டவரும், மூன்று கண் படைத்தவரும். உடம்பு முழுவதும் திருநீறு அணிந்தவரும், தேவனும், முதலும் முடிவும் அற்று ஆணவம் என்னும் மலப்பற்று நீங்கி எங்கும் நிறைந்திருப்பவரும், பஞ்சாக்ஷரங்களில் முதலான நகார ரூபியுமான அந்த சிவனுக்கு நமஸ்காரம்
மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம காராய நம ஷிவாய
கங்கையை தலையில் அணிந்து கொண்டு அதிலிருந்து உடம்பில் பெருகும் நீரைச் சந்தனம் போல் ஆனந்தமாய் பூசிக் கொள்பவரும், நந்திகேச்வரன், பிரமத கணங்களுக்கு தலைவன் முதலிய பெரியவர்களை அடக்கி ஆள்பவரும், மந்தாரம் முதலிய கற்பக மரத்தின் பூக்களால் என்றும் பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷரத்தின் இரண்டாவது எழுத்தாகிய மகாரத்தினால் பூஜிக்கப்பட்டவருமான அந்த சிவபிரானுக்கு எனது வணக்கம்.
சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஷி காராய நம ஷிவாய
மங்கள மூர்த்தியாயும், மலைமகளாகிய பார்வதியின் முகமாகின்ற தாமரையை மலரச் செய்வதில் கதிரவனும், தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்தவரும், காலகூட விஷத்தால் நீலமாகிய கழுத்தை உடையவரும், காளைக்கொடியை யுடையவரும் பஞ்சாக்ஷரத்தின் மூன்றாவது எழுத்தாகிய சிகார ரூபமாயுமிருக்கின்ற அந்த பரமேச்வரனுக்கு எனது நமஸ்காரம்.
வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய
தஸ்மை வ காராய நம ஷிவாய
வசிஷ்டர், அகஸ்தியர், கௌதமர் போன்ற மாமுனிவர்களும் பணிந்து பூஜைசெய்யும் கங்கையைக் கிரீடம்போல் அணிந்துகொண்டும், சந்திரன், சூரியன் அக்னி இம்மூவர்களை தன் மூன்று கண்களாய் செய்து கொண்டும், பஞ்சாக்ஷரத்தின் நான்காவது எழுத்தாகிய வகாரமாயும் விளங்கும் பரமசிவனை நான் பணிகிறேன்.
யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காராய நமஷிவாய
எல்லோரும் வியந்து பக்தியோடு பூஜிக்கத்தக்க வடிவம் கொண்டவரும், ஜடை சூடியவரும், பினாகம் என்னும் வில்லைக் கையில் தரித்தவரும், எங்கும் விளங்குபவரும், மாயையின் செய்கைக்கு உட்படாதவரும், எங்கும் ஒளிரும் பிரகாசம் பொருந்தியவரும், உலகத்தையே ஆட்கொண்டவரும், பஞ்சாக்ஷரத்தின் ஐந்தாவது எழுத்தான யகாரமாயுமிருக்கின்ற அப்பரமசிவனுக்கு நான் அடிபணிகின்றேன்.